Friday 25 March 2011

"கலைஞர் என்கிற கருணாநிதிக்கு"




உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரேத் தலைவர் என சொல்லப் படுகிற (தன்னை சுற்றி இருப்பவர்களால் மட்டும்), அல்லது சொல்லிக் கொள்கிற தற்போதைய தமிழக முதல்வர் திரு.கலைஞர் என்கிற கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். இந்த தமிழகத்தின் ஒரு சாதாரண குடிமகனாய் உங்களிடம் நான் சில விபரங்களையும், கேள்விகளையும் கேட்க விரும்புகிறேன். தமிழகத்தின் ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க அயராது பாடுபடும் தாங்கள், எமது வினாவுக்கு விடைப் பகன்றால் எம் போன்ற சாதாரண பாமரனின் கவலையும், துயரமும் நிச்சயம் தீரும்.

1969 - 1980 கள் வரையான காலங்களில் ஒரு தி.மு.க தலைவர் இருந்தார். அவர் மு.கருணாநிதி.
1950 - 1969 கள் வரையான காலங்களில் ஒரு தமிழ்த் தொண்டன் தி.மு.க வில் இருந்தார். அவர் அண்ணாவின் தம்பி, போர்ப்படை தளபதி, இவரை நீங்கள் அறிவீர்களா..? அறிவாலயத்தில் வீற்றிருந்த அரிமா அந்த மனிதர். தற்போது அவரை எங்கேனும் பார்த்ததுண்டா... நீங்கள்..?

1980 க்கு பிறகு இங்கே ஒருவர் இருக்கிறார்... தி.மு.க எனும் பொதுசொத்தை தனக்கும், தன் மக்களுக்கும் மட்டுமே சொந்தமான பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றிக்கொண்டு, தன் குடும்ப சொத்து மதிப்பை உலக அளவில் உயர்த்திக்கொண்டு.... பிள்ளைகளுக்குப் பின் பேரப்பிள்ளைகள் வரை தனது ஆட்சி நீடிக்க என்ன வழி எனக் கண்டு பிடித்து மக்களை முட்டாளாக்கி, அப்படியும் இப்படியமாய் ஒரு சுயநலப் போக்கை கையாண்டு, அதற்காக இதுவரை இருப்பதாக சொல்லிவந்த தன்மானம், திராவிட பாரம்பரியம், தமிழர் உணர்வு, ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாய் அடகுவைத்து, தற்போது விற்றே விட்ட அந்த மனிதரின் பெயர்..........

கலைஞர்............

என்கிறது தமிழ்நாடு.




தமிழை உச்சரித்து, தமிழுக்காய் போராடி, பலரின் பாராட்டை பெற்ற அந்த கருணாநிதி, கலைஞராய் மாறியப் பின் கண்டதெல்லாம் "தன்னலம்" மட்டுமே. இப்படி ஒரு அவதாரம் எடுத்து இருந்த புகழையும் இலங்கைத் தமிழன் பிரச்சனை மூலம் இழந்து நிற்கும் அவலம் எதற்காக..? இலங்கைத் தமிழன் மட்டுமல்ல, இங்கிருக்கும் தமிழனும் இப்படித்தான் நினைக்கிறான். கொஞ்சம் உங்களை சுற்றி இருக்கும் உங்கள் சால்ரா தட்டும் மக்களைத் தாண்டி, சினிமாவைத் தாண்டி, வெளியே வந்து ஒரு பாமரன், ஒரு சாமானியனிடம் பேசிப்பாருங்கள். புரியும்.

மக்களிடம் இலட்சியம் பேசி, மேடைகளில் கொள்கைகள் முழங்கி, தமிழைப் பேசி வோட்டு வாங்கிய உங்கள் தன்னம்பிக்கை இப்போது எங்கே..? எதற்காக இப்போது இலவசங்களை சொல்லிச் சொல்லி வோட்டுக் கேட்கிறீர்கள்..? இலவசங்களை தந்து என் போன்ற சாதாரணத் தமிழனை உலக அளவில் பிச்சைக் காரனாய் காட்டும் அதிகாரம் உங்களுக்கு தந்தது யார்..? தமிழர்களுக்கு நியாயமாய் செய்திருக்க வேண்டிய கடமைகளை, பொறுப்புகளை திராவிடக் கழகங்கள் செய்திருந்தால் இந்த மாநிலம் இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலமாய் மாறி இருக்கும் என்பது உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இந்தி எதிர்ப்பில், மக்களை ஏமாற்றி விட்டு, உங்கள் வீட்டுப் பிள்ளைகளை இந்தி கற்க செய்த மர்மம் நாடறியும். வீராணம் ஏரி திட்டத்தில் நீங்கள் நடந்து கொண்ட விதம், மதுக்கடையை மாநிலத்தில் அவிழ்த்து விட்டு மக்களை குடிகாரனாக்கியது. எதிர்க் கட்சியாய் இருக்கும்போது மட்டும் செயல்படுவது, மாநில அவலங்கள் பேசுவது, தான் ஆட்சிக்கு வந்த பிறகு அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, இப்படி இதைத்தானே மாறி மாறி செய்தீர்கள்.

உங்கள் முகம் மக்களிடம் எடுபடாமல் போன காலகட்டம், வெறும்பேச்சுக்கு மயங்காத கூட்டம் பார்த்து இலவசம் எனும் எலும்புத்துண்டை கையில் எடுத்து விட்டீர்கள். இந்த இலவசங்களுக்குப் பின் உள்ள விவரங்களை உங்களால் தர முடியுமா..?


நீங்கள் 2006 ல் ஆட்சிக்கு வந்தபோது....

# தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம், மற்றும் செலவுக் கணக்குகளையும், தனி நபர் மீதான கடன் விபரமும்,

தற்போது நடப்பு ஆண்டு வருமானம், செலவு, தனிநபர்க் கடன் பற்றி வெளிப்படையாய் வெளியிட முடியுமா..?

# உங்களின் இலவசத் திட்டங்களுக்காக தாங்கள் எந்த வருமானத்தை பயன்படுத்தினீர்கள்..? இதற்கான மொத்த செலவுகள் பற்றி சொல்ல முடியுமா..? உலக வங்கி மற்றும், மத்திய அரசாங்கத்தின் கடன், பற்றி வெளியிட முடியுமா..?

# அரசாங்கத்தில் இதுவரை ஒதுக்கிய துறை சார்ந்த ஒதுக்கிடுகளை, தாங்கள் தவறாக பயன்படுத்த வில்லை என உத்திரவாதம் தர முடியுமா..?

# மத்திய அரசாங்கத்தின் உதவித்தொகைகளை, மாநில அரசாங்கம் தருவதாகச் சொல்லி ஏமாற்ற வில்லையா..?
எல்லாப் புகழையும் தானே அடைய வேண்டும் என்கிற வேட்கை உங்களை கடைசிக்காலத்தில் இப்படி கண்மூடித்தனமாய் செயல்பட வைக்கிறது.

# எதிரிகள் இருக்கக் கூடாது என்பது உங்களின் இப்போதைய கொள்கை. இருந்தால் ஒழித்துக்கட்ட பிரயத்தனம் செய்து அதையும் வெளியில் தெரியாமல் மறைத்து விடும் புத்திசாலித் தனம். அரசியல் சாணக்கியத்தனம்.

# உங்கள் ஆட்சியில் ஒவ்வொரு முறையும் வன்முறையும், வன்முறையாளர்களும் சகசமாய் கட்டவிழ்த்து விடப்படும் காரணம் என்ன..?

# உற்பத்தியைப் பற்றி பேசாமல், உற்பத்தியை உயர்த்தாமல் இலவசங்கள் எனும் பெயரில், மின்சாரம், சமையல் வாயு, போன்றவற்றின் உபயோகத்தை திடீரென உயர்த்தி அதன் மூலம் செயற்கையான தேவையை அதிகரிக்கச் செய்து, நாட்டில் பொருளாதாரம் சீர்குலையவும், விலை ஏறவும் காரணமாகவில்லையா..?

# அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற நீங்களும் ஒரு முக்கிய காரணம். இலவச வீடு, இலவச அரிசி என நீங்கள் வாய்த் திறந்த வினாடிகளில் இருந்தே.... கண்மூடித்தனமாய் அநியாயமாய் விலை ஏற்றி விற்கப்படும் பொருட்களை பற்றி யோசிக்காமல், வெறும் திட்டங்கள் மூலம் தனி நபர்களை கடனாளியாக்கியது தவிர, தங்களின் சமீபத்திய சாதனை என்ன..?

# இலவசமாய் அரசாங்க செலவில் கிழக்கு கடற்கரை சாலையில் எம்.எல்.ஏக்களுக்கு சொந்த பட்டா என்பது நியாயமா..?

# உங்களின் கட்சியில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சரும் தன்னுடைய சொத்துக்கணக்கையும், வருமானத்தையும் சொல்ல முடியுமா..?

# ஆக ஒரு கூட்டமாய் சேர்ந்து கொள்ளை அடிப்பதை சாமானியனாய் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு.


உங்களின் தனிப்பட்ட சாதனைகள் எதுவும் இருக்காது என்பது தெளிவாகிறது.

இந்த தள்ளாத வயதில் தாங்கள் ஓய்வெடுக்க விரும்பாமல் இடத்தை தக்க வைக்க போராடும் தன்மையைப் பார்த்தால் உங்களின் பதவி வெறி பட்டவர்த்தனமாய் தெரிகிறது.

காமராசரிடம் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.....

பெரியாரிடம் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது....

கக்கனிடம் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது....

அண்ணாவிடமிருந்து நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியது....

இன்னும் இருக்கிறது ஏராளம்....

நீங்கள் முழுமையடையா வாழ்க்கையில் இருப்பதாகவே எண்ணுகிறேன்.

உங்களுக்கு திருப்தி என்பது எப்போது வரும்.....?????????????

தமிழகத்தை எப்போது விடப் போகிறீர்கள்...??

தார்மீக பொறுப்பேற்று பதில் சொல்ல முடியுமா...?

பதிலுக்காய்...காத்திருக்கும்,

தமிழ்க்காதலன்.

Friday 11 March 2011

"மாத்தி யோசி..."


எனதன்பு தமிழுலகுக்கு, வணக்கமுங்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை தமிழ்த்தென்றலில் சந்திக்கிறேன். நாடும் நாமும் ஒரு திருப்புமுனையை சந்திக்கும் தருவாயில் உங்களை சந்திக்கிறேன். கொஞ்சம் நம்மைப் பற்றி சிந்திக்கிறேன்.

நமது இந்தியாவில் வளைகுடா நாடுகளைப் போல மன்னராட்சி நடக்குது என எண்ணத் தோன்றுகிறது. ஏன் இப்படி சொல்கிறேன் என நினைக்கிறீர்களா..? நம்முடைய தேசம் சுதந்திரம் அடைந்தது என்பதை ஏற்க முடியாத அளவுக்கு இங்கே நிகழ்வுகள் தொடர்கின்றன.

. வாரிசு அரசியல் : நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என மத்தியில் தொடரும் ஒரு பரம்பரை ஆட்சி முறை. கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என மாநிலங்களில் தொடரும் பரம்பரை ஆட்சிமுறை. இங்கே எங்கே சனநாயகம் இருக்கிறது. காங்கிரசும், தி.மு.கவும் இவர்களின் பரம்பரை சொத்து என எண்ணிக கொண்டு செயல்படுகிறார்கள். இதை அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யாரும் தட்டிக் கேட்பதில்லை. காரணம், இவர்களின் வழிகாட்டலில் அவர்களும், தங்களின் வாரிசுகளை முன்னிறுத்தியே அரசியல் செய்கிறார்கள். எம்.எல்.ஏ வின் மகன் என்.எல்.ஏ, எம்.பி மகன் எம்.பி, மாவட்ட, வட்டங்களின் வாரிசுகளுக்கு தொடரும் அதிகார பொறுப்புகள்..... இப்படி தொடர்ந்து நடக்கும் ஒரு அரசியலமைப்பை இப்படி சனநாயக அமைப்பு என சொல்வது...?

. பொம்மைத் தலைவர்கள்: மேற்கண்டவர்களுக்கு சந்தர்ப்பம் வாய்க்காத போது இடையில் சொருகப்பட்ட துருப்புச் சீட்டாய் மற்றவர்களை அதிகாரமில்லாத் தலைவர்களாய் கையாள்கிறார்கள். அதில் அதிகம் பாதிக்கபட்ட நபர் மன்மோகன் சிங். ஒரு சோளக்காட்டு பொம்மை போல அவருடைய நிலைமை மிக மோசமாய் இருக்கிறது. இந்த தேசத்தின் எல்லாப் பெரிய அழிவுகளும் இவர் காலத்தில் நடந்ததாகவோ, அல்லது அடிக்கோலப்பட்டதாகவோ நாளைய தலைமுறை பேசும் என்பதில் சந்தேகம் இல்லை. அன்னை என்கிற பட்டம் பெற்ற சோனியா பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம் வெளியில் வரும் நாள் தொலைவில் இல்லை.

. தூக்குத்தூக்கிகள்: ஒரு தேசத்தின் தலைவர்கள் தவறு செய்யாவண்ணம் அவர்களை வழிநடத்தத் தான் பாராளுமன்றம். அது இங்கே ஒரு நாளும் அந்த கடமைகளை பொறுப்பாய் செய்ததாக தெரியவில்லை. "தண்டனைகள் வழங்க தலைமுறைகள் தாண்டும் நாடு" என்கிற நிலையில் நம்முடைய சட்டமும் நாடும் இருப்பதால், இங்கே "தூக்குத்தூக்கி" வாழ்க்கையில் இலாபம் பார்க்கும் நம்முடைய அமைச்சர்கள்....

. சரத்பவார்: இன்று வெளியிட்டிருக்கும் செய்தியில் "எண்டோசல்பான்" என்கிற பூச்சிக்கொல்லி மருந்து பிற நாடுகளில் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போது, சரத்பவார் பதில் தருகிறார், இந்திய விஞ்ஞானிகள் குழு பரிசோதித்து அனுமதித்த பிறகே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார். நான் கேட்கிறேன்.... இந்தியாவின் அனைத்து அறிவியல் துறைகளிலும் விஞ்ஞானிகளின் சிபாரிசுகள் எடுபட்டிருக்கிறதா..? அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை நம்முடைய அனைத்து தரப்பு விஞ்ஞானிகளும் எதிர்ப்புத் தெரிவித்தும் அமெரிக்காவுக்கு அடிமையாய் காங்கிரஸ் செயல்பட்ட விதம் நாடு அறியும்.

. பி.டி கத்திரிக்காய் முதல் அனைத்து விவசாய விதைகளுக்கும் இனி நாம் வெளிநாட்டினரிடம் விதை வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது இந்த அரசு. நம்முடைய பாரம்பரிய விதைகளை அழித்து விட்டு சில தனியார் நிறுவனங்கள் தரும் விதையை நம்பி ஒரு நாடு விவசாயம் செய்தால், விவசாயம் இப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள். தடை செய்யப்பட்ட மருந்தும், காய்கறியும், செடியும் நம் தலையில் கட்டாயமாய் திணிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன...?




௬. நல்ல தேயிலை இங்கே அரிதாய் கிடைக்கிறது. நல்ல சர்க்கரை இங்கே கிடைப்பதில்லை. உணவுப் பொருள்களில் முதல்தரமானதை இலாப நோக்குடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு குப்பைகளை அடைத்து விற்கும் அநாகரீகம் இங்கேதான் நடக்கிறது. கேட்டால் நம்முடைய மக்களின் வாங்கும் திறன் குறைவு என ஒரு சப்பைக்கட்டுக் காரணம். ஒரு தேசத்தில் உற்பத்தியாகும் பொருளை அந்த தேசத்து மக்கள் வாங்க முடியா நிலையில் தொடர்ந்து வைத்திருப்பது யாருடைய குற்றம்..? இதை தொடர்ந்து செய்யும் காங்கிரசை என்ன செய்யலாம். நமக்கு நம்முடைய கரும்பு தரும் சர்க்கரையை திண்ணவும், தேயிலையை குடிக்கவும் நமக்கு உரிமையில்லாத நிலையில் நாம் இருக்கிறோம்.

. தேசத்தின் பிரச்சனைகளைப் பேச, மக்களின் குறைகளை களைய தில்லிப் போகாத முதல்வர்கள், தங்களின் ஆட்சி பீடம் தக்கவைக்கவும், மகன்களின், மகள்களின் சீட்டுக்காகவும் தில்லிப் போகும் சுயநல பதர்களைத்தான் நாம் தலைவர்கள் எனக் கொண்டிருக்கிறோம். இனியேனும் எண்ணிப்பார்ப்போம் என்ன செய்யாலாம்...? என்பதை.
நம்முடைய உரிமைகளையும் கடமைகளையும் வென்றெடுப்போம்.


. இந்த மாறுதல் தராத தேர்தலில், இம்முறையாவது சிந்தித்து செயல்படுவோம்... இலவசங்களுக்கு சோரம் போனதின் விளைவுகளை இன்றைய விலைவாசிகளில் உணர்கிறோம். தப்பான ஆட்சிக்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறேதுவுமாகவும் இருந்துவிட முடியாது என்பதற்கு சான்றாக நம்முடைய மாநில ஆட்சி.

மாத்தி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாற்றுத் தேவை. அவசியம் மாற்றுவோம். மாறுவோம்.
இல்லையெனில் அடுத்த முறை குடிக்க கூட சிறுநீரை தூய்மைப் படுத்தும் இலவசத் திட்டங்கள் உங்கள் முன்னாள் வைக்கப் படும். யோசியுங்கள்.



விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்.....

வேறு சங்கதியுடன்.....

என்றும் தமிழனாய்.....
தமிழ்க்காதலன்.